என் கண்ணீரை

 என் கண்ணீரை உமது துருத்தியில் வையும்.

(சங் 56:8)


நம்முடைய கஷ்டங்கள், வேதனைகள் மற்றும் பாடுகள் அனைத்தையும் தேவன் பார்க்கிறார், அறிகிறார், அறிக்கையேட்டில் எழுதி வைக்கிறார்.(சங் 139:16;மத் 6:25-32)


1) ஒரு உண்மையான விசுவாசியானவன் சிந்தும் ஒவ்வொரு கண்ணீரும் தேவனால் சேர்த்து வைக்கப்பட்டு, அவருடைய நினைவில் கவனமாகப் பாதுகாக்கப்படுகிறது; உலகத்தில் நம்முடைய பாடுகளுக்கேற்ப நம்மை ஆறுதல் படுத்தவும், பலனளிக்கவும் தக்கதாக அவர் ஒரு பதிவேடு வைத்திருக்கிறார். ஏனெனில் ஒவ்வொரு சோதனையிலும் நாம் தேவனுக்கு உண்மையாக தொடர்ந்திருப்போமானால், நாம் பரலோகத்தில் அவரோடு கூட இருக்கும்போது ஒரு பரிபூரண ஆனந்தத்தையும், மகிமையையும் அறுவடை செய்வோம். 

(ரோம 8:17;இல் )

*அவருடனே கூட பாடுபட்டால்*

என வாசிக்கிறோம். 

ஆவியில் வெற்றி வாழ்க்கை வாழ்வது அவ்வளவு எளிதானது அல்ல என்பதைப் அப்போஸ்தலன் பவுல் மூலமாக பரிசுத்த ஆவியானவர் ஞாபகப்படுத்துகிறார். இயேசு கிறிஸ்து பாடுகளை அனுபவித்தார். அவரை பின்பற்றும் நாமும் பாடுகளை சகிக்க வேண்டும். இந்த பாடுகள் அவரோடு கூட படும் பாடுகளாக எண்ணப்படுகிறது. (2கொரி 1:5; பிலி 3:10; கொலோ 1:24; 2தீமோ 2:11-12)

இந்த பாடுகள் நாம் தேவனுடைய பிள்ளைகளாய் இருப்பதினாலும், கிறிஸ்துவோடு கூட நமக்கு இருக்கும் ஈடுபாடு நாம் அவருக்கு கொடுக்கும் சாட்சி, இந்த உலகத்தோடு ஒத்துப் போக மறுப்பது ஆகியவற்றினாலும் வரும் விளைவாக உள்ளது.

(ரோம 12:1-2)


*இக்காலத்து பாடுகள்.*

(ரோம 8:18)


வியாதி, வேதனை, துன்பம், ஏமாற்றம், வறுமை, கேவலமாக நடத்தப்படுதல், துக்கம், உபத்திரவம் வேறு பல விதமான கஷ்டங்கள் ஆகிய எல்லா தற்காலத்து பாடுகளும், இனி வரப் போகிற காலங்களில் உண்மையான விசுவாசிகளுக்கு கிடைக்கப் போகும் ஆசீர்வாதம் அனுபவம் சிறப்பான உரிமைகள் மகிமை ஆகியவற்றோடு ஒப்பிட்டு பார்க்கும்போது நம் பாடுகள் அற்பமானதாக கருதப்படும்.

(2கொரி 4:17).


(1பேது 4:14 இல்)

வாசிக்கும்போது. 

*தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர்.*


கிறிஸ்துவுக்கு உண்மையா இருப்பதன் மூலம் உபத்திரவத்தை அடைபவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் ஆவர்.(1பேது 4:13,3:14;மத் 5:11-12)

காரணம் என்னவெனில், பரிசுத்த ஆவியானவர் விசேஷ விதமாக அவர்கள் மேல் தங்கியிருப்பார். அவர்களுடைய வாழ்க்கை முழுவதும் ஆவியானவரின் பிரசன்னத்தால் நிரம்பியதாகக் காணப்படும்.

இந்த தேவப்பிரசன்னமானது அவர்களுக்குள் கிரியை செய்து அவர்களை ஆசீர்வதித்து, அவர்களுக்கு உதவி செய்து பரலோக மகிமையை ருசிக்கும்படி செய்கின்றது. 

(எசா 11:1-2; யோவா 1:29-34;அப் 6:9-15).


2) இப்படியாக கஷ்டங்கள் கவலைகள் அழுது துக்ககரமான சோதனைகள் நாம் வழியில் வருகிற போது, நமது ஏமாற்றம் நிறைந்த அனுபவங்கள், வியாதிகள், நித்திரையற்ற இரவுகள், பொருளாதார சோதனைகள், அல்லது வேலை ஸ்தலத்தில் ஏற்படும் தாள முடியாத துன்ப நிலை இவை அனைத்தினூடேயும் தேவன் நம்மை அன்புடன் உற்றுப் பார்க்கிறார் என்பதை நாம் ஒருபோதும் மறக்க வேண்டாம்.


தேவ சமூகத்தில் நாம் சிந்தும் ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்கும் மதிப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து பாடுகளை சந்தோஷமாக எண்ணி, நமக்காக பாடுபட்ட  பரமனை மகிமை மகிமைப்படுத்தி பிதாவாகிய தேவனை ஸ்தோத்தரிப்போம். கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக ஆமென். 


கிறிஸ்துவின் பணியில் 

சகோதரன் 

சிலுவை ராஜா 


Comments

Popular posts from this blog

பிரபல ஊழியர்களை தேடி....

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

திருச்சபை