ஆமோஸ்- சுமை சுமப்பவர்
ஆமோஸ் - சுமை சுமப்பவர்*
கிறிஸ்து பிறப்பதற்கு முன் 8 ஆம் நூற்றாண்டில் (கி.மு.800 - 700) யூதாவில் பிறந்து இஸ்ரவேல் தேசத்திற்கு தீர்க்க தரிசனம் உரைத்தவர் தான் இந்த ஆமோஸ் என்னும் தீர்க்கதரிசி. *ஆமோஸ்* என்றால் *சுமை சுமப்பவர்* என்று பொருள்படும். இறைவாக்கு உரைக்கும்படி கடவுளிடமிருந்து அழைப்பு பெறுவதற்கு முன்னர், ஆமோஸ் ஆட்டு மந்தைக்கு உரிமையாளராகவும், காட்டு அத்திமரத் தோட்டம் பயிரிடுபவராகவும் இருந்தார். *நான் இறைவாக்கினன் இல்லை; இறைவாக்கினர் குழுவில் உறுப்பினனும் இல்லை* (7:14) என்று அவரே தம்மை அடையாளம் காட்டுகிறார்.
எப்படி ஆடுமேய்த்த தாவீதை கர்த்தர் அரசனாக்கினாரோ அதே போல தான் ஆடுமேய்த்த ஆமோசையும் கர்த்தர் தீர்க்கதரிசியாய் மாற்றினார். இவர் மேய்ப்பனின் குணாதிசயத்தை அழக்காக ஆமோஸ் 3:12 -ல் கூறி இருக்கின்றார்.
*ஒரு மேய்ப்பன் இரண்டு கால்களையாவது ஒரு காதின் துண்டையாவது சிங்கத்தின் வாயிலிருந்து பிடுங்கித் தப்புவிக்குமாப்போல*
என்று. இந்த வசனத்தின் பொருள் என்னவென்றால் மேய்ப்பனானவன் எந்த சூழ்நிலையிலும் கொடிய விலங்கிடம் அகப்பட்ட ஆட்டை காப்பாற்ற வேண்டும். சிங்கம் தான் பிடித்து விட்டதே. இனி அந்த ஆடு பிழைக்காது என்று விட்டுவிட்டு செல்லாமல் முடிந்த அளவு போராடி கால்களையாவது அல்லது காதின் துண்டுகளையாவது காப்பற்ற வேண்டுமென்று ஆமோஸ் 3:12 தெளிவாக கூறுகின்றது. அப்படிப்பட்டவன் தான் உண்மையான மேய்ப்பன் என்று ஆமோஸ் தனது அனுபவத்திலிருந்து கூறுகின்றார்.
தாவீது கூட சிங்கத்திடமிருந்தும் கரடியிடமிருந்தும் மந்தையை காத்துள்ளதை (1 சாமுவேல் 17-34,35 - ல்)வாசிகின்றோம். தாவீது தனது ஜீவனையும் பொருட்படுத்தாமல் மந்தையை காப்பாற்றின காரணத்தினால் தான் தேவன் தாவீதை ராஜாவாக உயர்த்தினார். ஓவ்வொரு இரட்சிக்கப்பட்ட கிறிஸ்த்தவனுக்கும் ஒரு மந்தையை தேவன் கொடுத்துள்ளார். அதாவது ஒரு கூட்ட ஜனங்களை பரலோகத்திற்கு நேராய் நடத்தும் படியாக நம்மிடம் கொடுத்துள்ளார். அந்த மந்தையின் மக்கள் பிசாசினால் வஞ்சிக்கப்பட்டு பாவத்தில் விழுகையில் அவர்கள் அவ்வளவுதான் என்று அவர்களை வஞ்சித்த பிசாசின் கைகளில் முற்றிலும் விட்டு விடாமல், மேய்ப்பனாகிய நாம்தான் பிசானவனோடு போராடி அவர்களை மீட்க வேண்டும்.
இயேசு சொல்கிறார், *நானே நல்ல மேய்ப்பன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்* (யோவான் 10:14-15). இயேசுவின் சிலுவையில் ஜீவன் தந்து நாம்மை காப்பாற்றியதால் தான் இன்றைக்கு நாம் விடுதலையுடன் வாழ்கின்றோம். இயேசு நம்மிடம் கொடுத்துள்ள சிறு மந்தையாகிய குடும்பம், நண்பர்கள், உறவினர்கள், விசுவாசிகள் என அநேகரைப் பாதுகாக்கும் பொறுப்பு உங்கள் கையில் உள்ளது. ஆதலால் விழிப்போடு இருந்து நம் மந்தையை காப்போம். பரலோகம் சேர்ப்போம்.
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
தொடர்புக்கு
9841711591.
Comments